sireku



மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் தமது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரி முன்னெடுத்து வரும் போராட்டம் நான்காவது நாளாகவும் இன்று தொடர்கிறது.

குறித்த சத்தியாக்கிரக போராட்டத்தினை மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றிணைந்து, கடந்த செவ்வாய்க்கிழமை தொடக்கம் காந்தி பூங்கா முன்பாக முன்னெடுத்து வருகின்றனர்.


கிழக்கு மாகாணத்தில் 2012-03-31 இற்கு பின்னர் பட்டம் பெற்ற 4500 இற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் வேலையற்று இருக்கும் நிலையில், இதற்கான எந்த தீர்வினையும் வழங்குவதற்கான நடவடிக்கையினை மத்திய மாகாண அரசுகள் எடுக்கவில்லையென பட்டதாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.


இது குறித்து பட்டதாரிகள் தமக்கு தேவையான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

அந்த வகையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2012-03-31க்கு பின்னர் பட்டம்பெற்ற 1800க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். இவர்களில் அதிகமானவர்கள் பெண்கள்.


பட்டதாரிகள் நியமனங்கள் வழங்கப்படும் போது பட்டம்பெற்ற ஆண்டின் அடிப்படையில் நியமனம் வழங்கப்பட வேண்டும். வயதெல்லை 45 அதிகரிக்கப்பட வேண்டும்.

பட்டதாரிகளின் நியமனங்களுக்கான விண்ணப்பம் கோரப்படுகையில் ஏற்கனவே அரசசேவையில் இருப்பவர்கள் விண்ணப்பிக்காதவாறு சுற்று நிரூபம் அமையவேண்டும்.


கோட்டாமுறையில் நியமனங்கள் வழங்கப்படும் செயற்பாடுகள் முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும். இறுதியாக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட ஆசிரிய ஆளணி சுற்று நிரூபத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு முகாமைத்துவ சேவைத்திணைக்களத்தின் அனுமதி பெறப்பட்டு கிழக்கு மாகாண ஆசிரிய வெற்றிடத்தை வெளியிட வேண்டும்.

அதற்கான நிதியொதுக்கீட்டை மேற்கொள்ள வேண்டும். விண்ணப்பம் கோரப்படும் போது மாற்றுத்திறனாளிகள் விசேட கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.


தமது பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வொன்றினை பெற்றுத்தராமல் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் வேடிக்கை பார்த்து வருவதாக பட்டதாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.


பட்டதாரிகளின் பிரச்சினைகளை பட்டதாரிகளின் பிரச்சினையாக மட்டும் பார்க்காமல் ஒரு சமூகப்பிரச்சினையாகக் கொண்டு மிகவிரையில் தீர்வொன்றினைப் பெற்றுத்தர அனைவும் முன்வரவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதேவேளை சத்தியாக்கிரக போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்ற கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாரூக் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கலந்துரையாடியதுடன், அவர்களின் போராட்டத்திற்கு தனது ஆதரவினையும் தெரிவித்துள்ளார்.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...