sireku

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 69ஆவது சுந்திர தினத்தை முன்னிட்டு, கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு சமாதானச் செய்தியைத் தாங்கிய புறாக்கள் பறக்கவிடப்பட்டுள்ளன. கிளிநொச்சி புகையிரத நிலைய முன்றலிருந்து பதினைந்துக்கும் மேற்பட்ட புறாக்கள் பறக்கவிடப்பட்டன.

குறித்த புறாக்கள், சுமார் நான்கு மணித்தியாலயங்களில் கொழும்பைச் சென்றடையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். சிறிய துண்டு ஒன்றில் தகவல்கள் எழுதப்பட்டு புறாக்களின் காலில் கட்டப்பட்டு,  இன்று காலை 7.45 மணிக்கு புறாக்கள் பறக்கவிடப்பட்டன.

புறாக்களின் கால்களில் கட்டப்பட்டுள்ள தகவல் துண்டில் தகவல் எழுதியவர்களின் அலைபேசி இலக்கமும் எழுதப்பட்டுள்ளது. புறாக்கள் கொழும்பைச் சென்றடைந்ததும் அங்கிருந்து குறித்த அலைபேசி இலக்கத்துக்கு அழைப்பு மேற்கொள்ளப்பட்டு தகவல் தெரிவிக்கப்படுமெனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

மேற்படி சமாதானச் செய்தியைத் தாங்கிய புறாக்களை, கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கிளிநொச்சி முல்லைத்தீவுப் பிரதி பொலிஸ்மா அதிபர் வெலிகன்ன, மேலதிக அரச அதிபர் சத்தியசீலன், புகையிரத நிலைய அதிபர், மாவட்ட திட்டப் பணிப்பாளர், மதகுரு ஆகியோர் பறக்கவிட்டனர்.