அளுத்கம கலவரம் குறித்து விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி !!
இலங்கையில் கடந்த வருடம் அளுத்கம தர்கா நகர் பகுதியில் ஏற்பட்ட கலவரங்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் தவறியுள்ளார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொள்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தக் கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் தவறியுள்ளதாக குற்றம்சாட்டி பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்கள் சிலர் தாக்கல்செய்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை ஆராய்ந்த நீதிபதிகள், இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
பொதுபல சேன அமைப்பின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த கலவரங்களைக் கட்டுப்படுத்துவதற்கு காவல்துறையினர் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லையென்று குற்றம்சாட்டிய மனுதாரர்கள், இதன் காரணமாக முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான 48 வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
அதே போன்று 72 கடைகளும் அழிக்கப்பட்டதாகத் தெரிவித்த மனுதாரர்கள், காவல்துறையினர் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை முறையாக பயன்படுத்தாமல் இருந்ததன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.
காவல்துறையினரின் இந்த நடவடிக்கைகளின் மூலம் முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்குமாறு இந்த மனு முலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், காவல்துறையினர் தனது கடமைகளை முறையாக மேற்கொண்டதாகவும் ஊரடங்கு சட்டத்தை மீறிய 300க்கும் மேற்பட்டவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
கலவரங்களுடன் சம்பந்தப்பட்ட 24 சிங்களவர்கள் மற்றும் 22 முஸ்லிம்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும் அரசதரப்பு வழக்கறிஞர் கூறினார்.
கருத்துக்களை ஆராய்ந்த நிதிபதிகள் இந்த மனுவை மேலும் விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்குவதாக அறிவித்தனர்.
இதன்படி மனு மூலம் சுமத்தப் பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்ப்பாக எதிர்வரும் ஜனவரி மாதம் 27 ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி கருத்துக்களைத் தெரிவிக்குமாறு போலிஸ் மா அதிபர் உள்ளிட்ட உயர் போலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
0 Comments