sireku
 (முள்ளிப்பொத்தானை ஜபருல்லாஹ்)

அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவராலயத்தை சேர்ந்த தூதுக் குழுவொன்று சில தினங்களுக்கு முன்னர் திடீரென வந்து திடீரை சந்தித்ததாக பரவலான செய்திகள் பலரின் முகநூல் பக்கங்களில் ஜொலித்ததை நாம் எல்லோரும் அறிவோம்.இது பற்றி பலரும் பல கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

சிலர் அவரை மகிந்த அரசு மீண்டும் இணைத்துக்கொள்ள முயற்சிப்பதாகவும் இன்னும் சிலர் மூதூர் முஸ்லிம்களினதும் அவரது ஏனைய ஆதரவாளர்களினதும் வாக்குகளை கொள்ளையிட இவரை அணுகியுள்ளதாகவும், மேலும் சிலர் இவரும் அரசாங்கத்தின் பண ஊழலுக்குள் சிக்கி விடுவாரோ என்றெல்லாம் பலவாறான கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

சமகால அரசியல் நீரோட்டத்தை எடுத்து நோக்குகையில் மேற்படி கருத்துக்களை நாம் எந்த வகையிலும் முற்றாக தட்டிக்கழிக்க முடியாது. ஏனெறால் அடிக்கடி கட்சி தாவும் படலங்கள் இப்பொழுது பரவலாக அரன்கேற்றப்படுவதேயாகும்.
இதற்கு உதாராணமாக நெடுங்காலமாக ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளராக இருந்த திஸ்ஸ அத்தநாயக்கவின் நிலைமையே அவ்வாறு ஆகி விட்டதென்றால், திடீர் தௌபீக் மட்டும் அதற்கு விதிவிலக்காக முடியாது என்பதை சுட்டிக்காட்டலாம்.

எது எவ்வாறாயினும் இதன் உண்மைத்தன்மை தொடர்பில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் ஓர் ஊகத்தின் அடிப்படையில் அமைந்திருந்ததே தவிர யாரும் உண்மையான தகவல் வெளியிட்டதாகவோ, அல்லது திடீர் தௌபீக் அவர்கள் இதனை நெறிபடுத்தும் வகையிலோ அல்லது நிராகரிக்கும் வகையிலோ எந்த ஒரு அறிக்கையையும் வெளியிட்டதாகவோ காணக் கிடைக்கவில்லை.

என்னதான் இருந்தாலும் நெருப்பில்லாமல் புகையாது என்று நம்மவர் கூறும் பழமொழிக்கேட்ப இங்கு ஏதொ ஒரு விடயம் நடந்திருக்கிறது என்ற ஒரு சந்தேகத்துடன் தற்பொழுது அமெரிக்காவில் இருக்கும் திடீர் தௌபீக் அவர்களை நேரடியாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாமே என்ற எண்ணத்தோடு சவூதி நேரப்படி நேற்றிரவு சுமார் பன்னிரண்டு மணியளவில் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது அவர் கூறியதாவது

 மேலுள்ள செய்திகள் அனைத்தும் உண்மை எனவும் வந்தவர்கள் மூதூர் மக்களின் ஆதரவை அரசாங்கத்துக்கு பெற்றுத்தருமாறும் அவ்வாறு பெற்றுத்தறும் பட்சத்தில் தனக்கு உயர் பதவிகள் வழங்குவதாகவும் மேலும் அவரது எதிர்கால அரசியல் தொடர்பில் ஒரு தீர்க்கமான வாக்குறுதி வழங்குவதாகவும் மேலும் பல இன்னோரன்ன விடயங்கள் தொடர்பாக பேசியதாகவும் தெரிவித்தார்.

 இதில் சில விடயங்களை வெளிப்படையாக சொல்ல முடியாது என்றும் தெரித்தார். இது தொடர்பில் தன்னை சந்திக்க வந்த தூதுவர்களுக்கு நிலைமைகளை விளக்கி தகுந்த பதில் கொடுத்து அனுப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் அவர்களுக்கு நீங்கள் கொடுத்த விளக்கங்கள் என்ன? மற்றும் இறுதியாக அவர்களின் கோரிக்கைக்கு நீங்கள் கொடுத்த பதில் என்ன என நாம் விலாவாரியாக வினவிய போது அவர் கொடுத்த பதில் எம்மை மட்டுமல்ல நம் அனைவரையும் சற்று சிந்திக்க வைக்கும் பதிலாகவே இருந்தது.

அதாவது முப்பது வருட கால யுத்தத்தின் போது கூட முஸ்லிம்கள் அனுபவிக்காத கஷ்டங்களுக்கும் இன்னல்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் முஸ்லிம் சமூகம் யுத்தம் முடிந்து இந்த அரசாங்கம் ஆட்சியேற்ற குறுகிய காலத்திற்குள் முகம் கொடுத்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டும் வகையில் கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட காவி வன்முறைகளை ஒன்று விடாமல் தொடராக அவர்களுக்கு சொல்லி விளக்கம் கொடுத்துள்ளதோடு மட்டுமல்லாமல் என்னுடைய சுய லாபங்களுக்காக எனது சமூகத்தை படுகுழியில் தள்ள நான் ஒருபோதும் உடன்படமாட்டேன் என்று உறுதியாக கூறி விட்டேன் என்றார்.

இவருடைய இந்த நடவடிக்கை இப்போதைய சூழ்நிலையில் முஸ்லிம்களால் வரவேற்கத்தக்கதாக இருந்தாலும் இவர் தொடர்பில் நாம் நமது கவனத்தை கடந்த காலத்தை நோக்கி சற்று நகர்த்திப்பார்க்க வேண்டிய அவசியம் இங்கு காணப்படுகின்றது.

அதாவது யுத்த வெற்றியின் பின்னர் சமாதான சூழலின் போது நடந்த முதலாவது கிழக்கு மாகாண சபை தேர்தலில் இவர் முஸ்லிம் காங்கிரசை பிரதிநிதித்துவப்படுத்தும் மூதூர் பிரதேச சபையின் தவிசாளராக இருந்து கொண்டு அரசாங்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டதோடு மட்டுமல்லாமல் அரசாங்கத்தின் சார்பில் அந்த தேர்தலிலும் போட்டியிட்டவர்.

அவ்வாறிருந்தும் தற்பொழுது அவருடைய பதில் அவரது முன்னைய செயல்பாடுகளுக்கு முற்றிலும் முரணானதாக இருப்பதானது அந்த காலகட்டத்தில் தனது மக்களுக்கு நல்ல சேவையைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடுதான் அரசாங்கத்துக்கு தனது ஆதரவை வழங்கி அந்த சந்தர்ப்பத்தில் செயல் பட்டிருக்கிறார் என்பதை மிக தெளிவாக காட்டுகிறது.

ஏனென்றால் அன்றைய தினம் அவரும் அரசியல் ரீதியாக ஒரு சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில் எதோ அவரது சுயநலத்துக்காக அவர் அரசாங்கத்தோடு சேர்ந்திருந்தால் இன்று மக்கள் பிரதிநிதியாக இல்லாத பட்சத்தில் அரசாங்கம் கொடுக்க நினைக்கும் கையூட்டு நிச்சயமாக அவருக்கு ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்திருக்கும்.அதை பெற்றுக்கொண்டு அவர் சந்தோசமாக இருந்திருக்கலாம்.

ஆனால் அவற்றையெல்லாம் உதறித் தள்ளி விட்டு தன் சமூகத்தின் விடிவவை மனதிற்கொண்டு செயல்பட்டிருக்கும் திடீர் தௌபீக் அவர்களை உண்மையிலேயே அந்த நேரம் திடீரென புரிந்து கொள்ள மூதூர் சமூகம் தவறி விட்டது என்றே குறிப்பிட வேண்டும்.

0 Comments

உங்கள் வருகைக்கு நன்றி...