ஹலால் சான்றிதழ் வழங்கும் செயற்பாடு நிறுத்தம் : ஜம் இய்யதுல் உலமா
sireku
ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் நிறுத்திக் கொண்டுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இன்று வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
' இவ்வருட ஆரம்பம் முதல் இலங்கையில் புகழ்பெற்ற, துறை சார்ந்தோர் மூலம் நிறுவப்பட்ட உத்தரவாதமுள்ள வரையறுக்கப்பட்ட நிறுவனமொன்று ஹலால் சான்றிதழ் வழங்குவதையும் தயாரிப்பு செயற்பாடு தொடர்பான கண்காணிப்பு உட்பட அதன் அனைத்து விடயங்களையும் வழிநடத்தவுள்ளது.
தேசிய பொருளாதார அபிவிருத்தியையும் சமூக ஒழுங்கையும் பேணிப் பாதுகாப்பதற்காகவே பொதுமக்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட நல்ல முடிவாகவே இந்த நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது.
பலதரப்பட்ட பங்குதாரர்கள், அதிகாரிகள் மற்றும் உள்நாட்டு பிரதிநிதிகளுடன் ஆலோசனை செய்த பின்னரே உத்தரவாதமுள்ள வரையறுக்கப்பட்ட நிறுவனமொன்றினுடைய வடிவமைப்பில் சுதந்திரமான நிறுவனமொன்றை அமைப்பது இன்றியமையாததாக கருதப்பட்டுள்ளது.
ஏனைய தரச் சான்றிதழ் வழங்கப்படுவது போல் உள்நாட்டு நுகர்வோர் மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதியாளர்கள் ஆகிய இரு சாராருடைய வேண்டுகோளுக்கிணங்க செல்லுபடியாகும் கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த நிறுவனம் எதிர்பார்க்கிறது.
ஏற்கனவே ஹலால் சான்றிதழ் பெற்றுக்கொண்ட மற்றும் ஹலால் சான்றிதழ் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்திருக்கும் நிறுவனங்களுடைய அனைத்து விடயங்களையும் புதிதாக பொறுப்பேற்கவுள்ள நிறுவனம் எதிர்வரும் காலங்களில் கவனிக்கும்.
மேலும் எதிர்காலத்தில் ஹலால் சான்றிதழ் வழங்குவது மற்றும் தயாரிப்பு செயற்பாடு தொடர்பான கண்காணிப்பு விடயங்களில் சமூக நலனையும் பொறுப்பையும் கருதி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடைய ஒத்துழைப்பும் ஆலோசனைகளும் இருக்கும்" என அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments